சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் காங்கிரஸ் எம்பிக்கள் சந்திப்பு: தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காங்கிரஸ் எம்பிக்கள் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், ஜோதிமணி, சுதா, கோபிநாத் ஆகிய 6 எம்பிக்கள் சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் தங்களுடைய தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உடனிருந்தார்.
சந்திப்புக்கு பிறகு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: காங்கிரஸ் எம்பிக்கள் தங்களுடைய தொகுதிகளில் உள்ள சில கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்தோம். தொகுதிக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு எம்பியும் அவர்கள் தொகுதியில் என்னென்ன கோரிக்கைகள் உள்ளதோ? அதனை எல்லாம் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள். காங்கிரஸ் எம்பிக்கள் இருக்கக்கூடிய தொகுதியில் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. தேர்தல் செயல்பாடுகள் தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம்” என்றார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அளித்த பேட்டியில், “கரூரில் இருக்கக்கூடிய மக்கள் பிரச்னைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். முதல்வரை காங்கிரஸ் எம்பிக்கள் சந்திப்பது இது முதல்முறை அல்ல. பலமுறை சந்தித்திருக்கிறோம். கரூர் மகளிர் அணி காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்தது தொடர்பாகவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.