சென்னை: கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு செய்த புகாரில் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய கால்நடை மருத்துவ கல்லூரியில் சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் பதவி காலத்தின் போது, கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள், திட்டங்களுக்கு தேவையான பொருட்கள், ஆய்வகங்களுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் ஆகியவை வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், முறைகேடு குறித்து விசாரிப்பதற்கு 3 பேர் கொண்ட கமிட்டி அமைத்து பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக விசாரணை நடைபெற்றதில், ரூ.5 கோடிக்கு அதிகமாக அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், கல்லூரி முதல்வராக இருந்த சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் பொறுப்பு முதல்வராக சதீஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.