சென்னை: சென்னை - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல் நேர வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான திட்டம் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படவில்லை.
இரவு நேர சேவையாக சேது சூப்பர்பாஸ்ட், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே 53 கி.மீ நீளமுள்ள முழு ரயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சிப்புளி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படைவிமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின் கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.
எனவே வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்துவற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநாளில் ராமேஸ்வரம் இருந்து மீண்டும் சென்னைக்கு ரயிலை இயக்குவதற்கு வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே வழித்தடத்தை இறுதி செய்வதற்கு முன்பு பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.