Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் 5 நாட்கள் நடந்து வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு முடிந்தது: டிசம்பரில் ரிசல்ட் வெளியிட வாய்ப்பு

சென்னை: சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்றுடன் முடிந்தது. மெயின் தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பரில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2025) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 979 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் சுமார் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே 25ம்தேதி நடந்தது. முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நடந்தது. முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை கடந்த ஜூன் 11ம் தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றோர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மெயின் தேர்வு இந்தியா முழுவதும் கடந்த 22ம் தேதி தொடங்கியது. மொத்தம் 24 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடந்தது. அதாவது சென்னை எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளை வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,செனாய்நகர் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நி்லைப்பள்ளி, செனாய்நகர் சுப்புராயன் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்தது. முதல் நாளான்று காலையில் முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடந்தது. தொடர்ந்து 23ம் தேதி காலையில் 2ம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும் நடந்தது. 24ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடந்தது. இறுதி நாளான நேற்று காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், மாலையில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது.

ேதர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபரகரணங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் போலீசார் மூலம் கடும் சோதனை செய்யப்பட்டனர். அதன் பின்னரே தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு எழுதுபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை தேர்வர்கள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வுகள் அனைத்தும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வு 5 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வுக்காக சென்னையில் மட்டும் 4 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மெயின் தேர்வுக்கான ரிசல்ட் அனேகமாக வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் நேர்காணல் தொடங்கும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தகுதி நிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.