Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது. 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 11.172 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகள் 100% கொள்ளளவில் உள்ளன

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக 100 சதவீதம் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு, அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து மழை பெய்தது.

இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரி ஆகியவை ஏற்கனவே 100 சதவீதம் நிரம்பியது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் 100 சதவீதம் நிரம்பியது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 10 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 35 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3231 மில்லியன் கன அடியாக உள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் மற்றும் வரத்து கால்வாய் மூலம் வினாடிக்கு 1050 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.

சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடியும் நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வினாடிக்கு 300 கன அடி வீதம் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 24 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3645 மில்லியன் கன அடியாக உள்ளது. இதன் மூலம் ஏரி 100 சதவீதம் நிறைந்துள்ளது. ஏரிக்கு மழைநீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியும், இணைப்புக் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கன அடியும் நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வினாடிக்கு 250 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 21.20 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3300 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 கன அடியும், இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும் நீர் வந்து கொண்டுள்ளது.

சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி வீதம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியிலிருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 12.58 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 532 மில்லியன் கன அடியாக உள்ளது.

கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 35.59 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 464 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 11172 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பி, கடல்போல் காட்சியளிகிறது. கடந்த 2015ம் ஆண்டு 23.45 அடி நீரை தேக்கி வைத்ததே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஏரியின் மதகுகள், ஏரிக்கரைகள் பலத்தை கண்டறிவதற்காக மொத்த உயரம் 24 அடி நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்து 100 சதவீதம் தேக்கி வைத்துள்ளனர்.

தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால், சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது 100 சதவீதம் நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தேக்கி வைத்துள்ளனர்.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியாக இருந்து 1998ம் ஆண்டு 2.5 அடி உயரம் உயர்த்தப்பட்டு நீர்த்தேக்கமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 100 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு, முதல்முறையாக 100 சதவீதம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 நீர்த்தேக்கங்களும் ஒரே நேரத்தில் 100 சதவீதம் நிரம்பியதும் குறிப்பிடத்தக்கது.