Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு அருகே வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு காரில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை செங்கல்பட்டு அருகே பாலூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலிறந்ததும் செங்கல்பட்டு அருகே மெய்யூர் சாலையில் நேற்றிரவு பாலூர் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவையில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்ற ஒரு காரின் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து சென்றபோது, சிறிது தொலைவில் நின்றிருந்த காரில், இந்த காரில் கொண்டு வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் மாற்றப்பட்டதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 2 காரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் பாலாஜி (42), புதுச்சேரியில் இருந்து தனது காரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 516 வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். பின்னர், மற்றொரு காரில் இருந்த சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி என்பவரின் மகன் மோகன் (41) என்பவருக்கு அந்த மதுபாட்டில்களை சப்ளை செய்ததாக தெரியவந்தது. மேலும், இருவரின்மீதும் வெளிமாநில மதுபாட்டில் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து பாலூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்த பாலாஜி, மோகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 516 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.