தர்பூசணியில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக பிரசாரம்; விவசாயிகளுக்கு இழப்பீடு அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு விவசாய நலச் சங்கம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரசாரத்தை பரப்பியதால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.