Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறநிலையத்துறை கோயில்கள் சார்பில் 70 வயது மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசாமி கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் நேற்று நடந்தது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு 2,500 ரூபாய் மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மண்டலங்களில் 200 மூத்த தம்பதிகளுக்கும், இதர மண்டலங்களிலிருந்து 631 மூத்த தம்பதிகள் என மொத்தம் இன்றைக்கு மட்டும் 831 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான புத்தாடைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் நம்பர் 1 அமைச்சர் என்றால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுதான். எப்படியும் மாதத்திற்கு 3, 4 நிகழ்ச்சிகள் என்னை அழைத்து அவர் நடத்திவிடுவார்.

ஆயிரக்கணக்கான திருமணங்களை முதலமைச்சரையும், என்னையும் வைத்து நடத்தியிருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சி, சற்றே வித்தியாசமான நிகழ்ச்சி, என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. பொதுவாக, பையனுடைய திருமணத்தையும், பேரனுடைய திருமணத்தையும் வீட்டில் இருக்கக்கூடிய அப்பா, அம்மாவும், தாத்தா பாட்டியும்தான் அதற்கு முன்னிலை வகித்து, அதற்கு தலைமையேற்று நடத்தி வைப்பார்கள். ஆனால், இந்த பேரன், எனக்கு தாத்தா, பாட்டியினுடைய திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதுவும் மேடையில் எனது இடதுபுறமும், வலதுபுறமும் இருக்கக்கூடிய தம்பதிகள் என்னிடத்தில் கேட்டுதான் மாலையை மாற்றிக் கொண்டார்கள். தாத்தா பாட்டியின் அனுமதி வழங்கிதான் பையனோ, பேரனோ தாலியை கட்டுவார்கள், மாலை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இந்த மேடையில் மட்டும் தான் பேரனிடம் அனுமதி வாங்கி தாத்தா பாட்டி மாலையை மாற்றி கொண்டார்கள். தம்பதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் மாலையை மாற்றிக் கொண்ட அந்த காட்சியை பார்த்தேன். எனவே மிகச்சிறந்த நிகழ்ச்சி. நான் வாழ்த்த வரவில்லை, வாழ்த்துகளை பெற வந்திருக்கிறேன். எனவே இந்த சிறப்பான நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள், வந்திருக்கக்கூடிய மூத்த தாத்தா பாட்டிகளுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாளர், ஜீயர் ராமானுஜ எம்பார் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாநகராட்சி நிலை குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, ஆளுங்கட்சி துணைத் தலைவர் காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.மதன் மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.