பெங்களூரு: கர்நாடக முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை சந்தித்து பேசினர். இதனால் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர். இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் என தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‘மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்.
முதல்வராக நான் தொடர வேண்டும் என அவர்கள் சொன்னால் தொடருவேன். எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை ஏற்று கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்று கொள்வார்’ என்றார். மேலும் பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். இருவருமே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுவதால் சோனியா, ராகுல் ஆகியோரிடம் பேசி விட்டு முடிவு செய்தவதாக கார்கே தெரிவித்தார். அதன்படி ராகுலுடன் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் உயரதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் அனைத்து உயரதிகாரிளின் ஆலோசனையின்பேரில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

