சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சற்று வேகம் குறைந்தது.
சென்னையில் இருந்து 770 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் கடலில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம் கலிங்கபட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
