7ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்; குரூப்-4 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 (குரூப் 4 பணிகள்) தேர்விற்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த 22ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கணினி வழித்திரை சான்றிதழ் சரி பார்ப்பிற்கு ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் பழங்குடி இளைஞர் பதவிகள் நீங்கலாக) தேர்வர்கள் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரி பார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை வருகிற 7ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் தெரிவின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
  
  
  
   
