Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்".. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி!!

மதுரை : கரூர் மாவட்டத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.

வழக்குகள் விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் பிறப்பித்த உத்தரவுகளும்!!

*கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சட்டத்தை இயற்றவேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது.

*பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். ஆகவே அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக் கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

*கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடை உயர்த்தி வழக்கக் கோரிய வழக்கில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடுகிறோம்.

*கட்சி கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கட்டாயம். தவெக பரப்புரையில் தண்ணீர் வசதி கூட செய்யாதது ஏன்?. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைகளுக்கு அனுமதிக்க கூடாது. மாநில, தேசிய நெடுஞ்சாலை அருகே எந்த கூட்டமாயினும் நடத்தப்படக் கூடாது. பொதுக்கூட்டங்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதை உறுதிப்படுத்தவேண்டும். குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

*கரூர் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளபோது, சிபிஐ விசாரணை கோருவதா?.நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம். போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால் மட்டுமே புகார் கூறலாம். உயிரிழந்தோரின் குடும்பங்களின் நிலையை யாராவது எண்ணி பார்த்தீர்களா?.சிபிஐ விசாரணை கோர பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது?. கரூரில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். (தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன)