சென்னை: ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் நுரையீரல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் இறப்புக்கான முதல் 3 காரணங்களில் சுவாச நோய்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மூலம் திறம்படக் கையாள முடியும். இந்தியாவில், நோய்களை தாமதமாகக் கண்டறிதல் ஒரு பெரிய சவாலாக தொடர்கிறது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் இலவச நடமாடும் நுரையீரல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சி வடபழநியில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. அதில், தலைமை விருந்தினராக நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் முழுவதும் பயணித்து நுரையீரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த சில வாரங்களில், போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, மேற்கு மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட 20 சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்ல உள்ளது. இந்த மாத இறுதிக்குள் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவர் செல்வி பேசுகையில், ‘காவேரி மூச்சுப் பரிசோதனை இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை சேவையை பொதுமக்கள் தங்கள் பகுதியிலும் கொண்டு செல்ல 044 4000 6000 என்ற எண்ணை அழைக்கலாம். இதன்மூலம், தேவை உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும்,’என்றார்.