சென்னை: எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சிவகங்கை கோட்டங்களில் சாலை மேம்பாடு, பராமரிப்பு திட்டங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. கோவை கோட்டத்தில் ஆத்துப்பாலம், உக்கடம் மேம்பால கட்டுமானத் திட்டம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. ஆர்.ஆர். இன்ஃப்ரா நிறுவனம் ரூ.655 கோடி மதிப்பில் 208 கி.மீ. சாலைப் பணிகளுக்கான டெண்டரை பெற்றதில் முறைகேடு நடந்துள்ளது.
ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா நிறுவனம் ரூ.493 கோடி மதிப்பில் 253 கி.மீ. சாலைப் பணிகளுக்கான டெண்டரை பெற்றதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ரூ.680 கோடியில் - பணிகளை மேற்கொள்ள கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனம் டெண்டர் பெற்றதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டச் சாலைப் பணிகளுக்கு ரூ.715 கோடியில் எஸ்.பி.கே. அன்ட் கோ நிறுவனம் டெண்டர் பெற்றதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்க பெற்றதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கே.சி.பி. இன்ஜினியர்ஸ், ஜே.எஸ்.வி. நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆர்.ஆர். இன்ஃப்ரா ரூ.1.65 கோடி, ஜே.எஸ்.பி. நிறுவனம் ரூ.8.5 கோடி இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.சி.பி. நிறுவனம் ரூ.2.62 கோடி, எஸ்.பி.கே. நிறுவனம் ரூ.7.73 கோடி இழப்பு ஏற்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்த பணிகளை விதிகளை மீறி பெற்று அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியில்லாத ஜே.எஸ்.வி. நிறுவனத்துக்கு சான்றிதழ் தந்த புகாரில் தஞ்சை மாநகராட்சி செயற்பொறியாளராக இருந்த ஜெகதீசன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த ஒப்பந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் தாமதம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.