Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் ஊழியர் பாலியல் பலாத்கார புகார்: பிரபல தொழிலதிபர் சமீர் மோடி கைது

புதுடெல்லி: முன்னாள் ஊழியர் அளித்த பாலியல் பலாத்காரப் புகாரில், பிரபல தொழிலதிபர் சமீர் மோடி டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பிரபல தொழிலதிபரும், தலைமறைவு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் சகோதரருமான சமீர் மோடி மீது, அவரிடம் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 10ம் தேதி பாலியல் பலாத்காரப் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த சமீர் மோடியை, காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

அவரது குடும்பத்தில் சொத்துப் பிரச்னை நீடித்து வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீர் மோடி, திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து, கடந்த 2019ம் ஆண்டு முதல் தன்னைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என சமீர் மோடி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கில் அந்தப் பெண் தன்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதமே காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும், அதற்கான வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சமீர் மோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.