Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாரி மீது பஸ் மோதி கண்டக்டர் பரிதாப பலி: 30 பயணிகள் காயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியானார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கோவை உக்கடத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 35க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பஸ்சை திண்டுக்கல்லை சேர்ந்த காசிராஜன் (52) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை பாலசுப்பிரமணியன் (44) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

பொள்ளாச்சி அருகே கோவை ரோடு ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வரும்போது, ஏற்கனவே சிறு விபத்தில் சிக்கி சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி பின்புறம் அரசு பஸ் மோதிய வேகத்தில் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் மோதியதில் அதில் பயணம் செய்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.

பஸ்சின் இடதுபுற சீட்டில் அமர்ந்திருந்த கண்டக்டர் பாலசுப்பிரமணியன் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பயணிகள் 30 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்த தாலுகா ஸ்டேஷன் போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.