கொல்கத்தா: தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட்டில் அவர் 16வது முறையாக 5 பிளஸ் விக்கெட் எடுத்துள்ளார். மேலும் தெஆ. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸி. ஆகிய சேனா அணிகளுக்கு எதிராக அதிகமுறை 5 பிளஸ் விக்கெட் எடுத்த ஆசிய வீரர் என்ற வாசிம் அக்ரமின் (12 முறை) சாதனையை பும்ரா (13 முறை) தகர்த்தார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் பும்ரா கூறியதாவது: இந்த பிட்சில் துல்லியமாக பந்துவீசினால் மட்டுமே எதிர்பார்த்தபடி விக்கெட் எடுக்க முடியும். முதலில் நான் பந்து வீசும் போதே எந்த லெந்தில் வீசவேண்டும் என்ற குழப்பம் இருந்தது. நான் எந்தவித கிரிக்கெட்டில் விளையாடுகிறேனோ, அந்தப் போட்டியில் 100 சதவீத உழைப்பை வழங்குவேன்.
எனக்கு ஓய்வு தாருங்கள் என்றெல்லாம் கேட்பது கிடையாது. என்னால் முடிந்தவரை நான் விளையாடுகிறேன். அணிக்காக என்னால் பங்களிக்க முடிகிறது, அதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களை நான் கற்றுக் கொள்கிறேன். டெஸ்ட்டை பொறுத்தவரை பொறுமை என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு முறையும் மேஜிக் பந்தை வீச வேண்டும் என்று முயற்சித்தால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பர். எனவே அந்த உணர்வை கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும், என்றார்.


