Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன்: கோவையில் பரபரப்பு

கோவை: ‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர், கடந்த 6 மாதமாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு ஆப் மூலம் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி தருண் (28) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவருடன் பேசி பழகி வந்துள்ளார்.

கடந்த 2ம் தேதி மாலை 6 மணிக்கு அந்த இளம்பெண்ணை, டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு கொண்ட தருண், நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த இளம்பெண்ணும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தருண் அந்த விடுதிக்கு காரில் சென்றுள்ளார். அங்கிருந்து இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றுள்ளார். அங்குள்ள குளத்தின் அருகில் காரை நிறுத்தி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தருண், நண்பர் தனுஷ் என்பவரை செல்போனில் பேசி வரவழைத்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி 1 பவுன் மோதிரம், 1 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் ரூ.90 ஆயிரத்தை அவரது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்து எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தருண் அந்த இளம்பெண்ணை விடுதி முன்பு இறக்கி விட்டுள்ளார். இரவு 11 மணியாகி விட்டதால் விடுதியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து தருண், அந்த இளம்பெண்ணின் மொபைல் மூலம் கோவை- திருச்சி ரோட்டில் உள்ள ஓட்டலில் அறை புக் செய்து கொடுத்து அங்கு அவரை இறக்கிவிட்டு தப்பி உள்ளார். நள்ளிரவு ஆனதால் வேறு வழியின்றி ஓட்டல் அறைக்கு சென்ற அந்த இளம்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறினார். அவரது சகோதரி நண்பர்களுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தனுஷ் திருச்சியில் பணியாற்றி வரும் போலீஸ் டிஎஸ்பி.யின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தருண் மற்றும் தனுஷ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.