*பக்தர்கள் கடும் அவதி
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் சன்னதி தெருவில் பணிக்காக உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையால் கடும் அவதியடைகின்றனர். இதனால் உடனே சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி பின் கோயில் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி மூலவர் ராமநாத சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு சன்னதி தெரு பேவர் பிளாக் சாலை வழியாக கோயிலுக்கு செல்கின்றனர். நெடுஞ்சாலை துறையினர் புதிய சாலை அமைக்கும் பணிக்காக கடந்த பேவர் பிளாக் கற்களை உடைத்து எடுத்தனர். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் குண்டும் குழியும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் சிதறி கிடக்கும் இந்த பாதையில் வழியாக செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள் தடுமாறி விழுந்து செல்லும் அவலநிலையும் உள்ளது.
மேலும் அக்னி தீர்த்தக்கடற்கரை வரை முதியோர்களுக்காக இயக்கப்படும் பேட்டரி வண்டிகளும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் வயதான பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செருப்பு அணியாமல் செல்லும் பக்தர்களுக்கு காலில் ரத்த காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து ஓடுவதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சன்னதி தெரு சாலையை விரைந்து அமைக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
