சென்னை: திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ். இவர், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து, பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மகள் திருமணம் செய்துகொண்ட காதலன் தனுஷின் தம்பியான இந்திரசாந்தை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனின் காரில் கடத்திச்சென்று, விடுவித்தனர்.
இதுகுறித்து, தனுஷின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் தந்தை வனராஜ், உறவினர் கணேசன், மணிகண்டன், விருப்ப ஓய்வுபெற்ற காவலர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஏடிஜிபி ஜெயராமன் கைது உத்தரவை ரத்து செய்தும், ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், அரசு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதற்கு சிறுவன் கடத்தல் வழக்கு ஓர் உதாரணமாக உள்ளதாகவும், சாதாரண மக்களின் வாழ்வு சுதந்திரம் குறித்த கவலையை இந்த வழக்கு ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த வழக்கை பார்க்கும்போது நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ என்று அச்சம் கொள்ள வைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் அதிருப்தியை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த, வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் ஸ்வீட்குமார், வேதா ஆகியோரை, சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் தந்தை வனராஜ் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.