*தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்
ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென குடத்தில் தலை சிக்கிக்கொண்டு பரிதவித்த 4 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்துக்குப்பம் ஊராட்சி சங்கலாபுரத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.
இவரது மனைவி அருணா. இவர்களது மகன் ரக்ஷிதன் (4). இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஸ்டீல் குடத்தை கவிழ்த்து தனது தலையில் வைத்து விளையாடியபோது எதிர்பாராமல் சிக்கிக்கொண்டது.
இதனால் பயந்துபோன சிறுவன் அலறியபடி கூச்சலிட்டான். சத்தம் கேட்ட அவரது பெற்றோர் ஓடி வந்து தலையில் சிக்கிய குடத்தை வெளியே எடுக்க முயன்றனர். இதேபோல் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களும் மீட்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.
இதையடுத்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரைமணி நேரம் போராடி ஸ்டீல் குடத்தை துண்டித்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.