Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எல்லையம்மன் கோயிலில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

செய்யூர்: செய்யூர் அடுத்த, எல்லையம்மன் கோயில் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் பகுதி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு செய்யூர், எல்லையம்மன் கோயில், ஓதியூர், நைனார் குப்பம், முதலியார் குப்பம் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கென பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் மழையிலும், வெயிலிலும் நிற்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பயணிகள் நிற்கும் இடத்தின் சாலையோரம் கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் பயணிகள் சாலையில் ஆபத்தான முறையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

இப்பகுதியில், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் எல்லையம்மன் கோயில் பகுதி வரை சாலையோர கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடந்து வருவதோடு ஆங்காங்கே பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கழிப்பறைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

எனவே, இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இப்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் நிழற்குடை அமைத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.