Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண ஆசை காட்டி பலாத்காரம்; லண்டன் தொழிலதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள லண்டன் தொழிலதிபரின் முன்ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனைச் சேர்ந்த கதம் என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் 4 முதல் 20ம் தேதி வரை லோனாவாலா மற்றும் பஹல்காம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று, கதம் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார்.

தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இந்த கொடூரத்தில் கதம் ஈடுபட்டதாகவும், ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் தன்னிடமிருந்து அவரும் அவரது சகோதரரும் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில், கதம் மற்றும் அவரது நண்பர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க, கதம் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கதம்-இன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் ஒருவருக்கு பொதுவாக முன்ஜாமீன் வழங்க தகுதியில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்று கதம்-இன் தந்தை இறந்தபோதுகூட அவர் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவுக்குத் திரும்பவில்லை. தற்போது உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கதம்-ஐ கைது செய்வதற்கான தடை நீங்கியுள்ளது. அதனால் காவல்துறையினர் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.