புதுடெல்லி: பாலிவுட் நடிகையின் பெயரைக்கொண்ட பசுமாட்டை கொஞ்சி மகிழ்ந்த பிரியங்கா காந்தி, அதுகுறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. கேரளாவில் பால் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடந்த 7ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடஞ்சேரிக்குச் சென்றார்.
அங்குள்ள பால் பண்ணை ஒன்றில், ‘ஆலியா பட்’ எனப் பெயரிடப்பட்டிருந்த பசுமாடு ஒன்றைக் கண்டார். அதனுடன் சிறிது நேரம் செலவிட்ட அவர், அதற்கு தீவனம் ஊட்டி கொஞ்சி மகிழ்ந்தார். இந்தப் பயணத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் தளத்தில் பிரியங்கா இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘பாலிவுட் நடிகை ஆலியா பட்டிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
ஆனால், உண்மையிலேயே அந்தப் பசு மாடு க்யூட்டி பை’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள் தீவன விலை உயர்வு, மருந்துச் செலவுகள் போன்ற பிரச்னைகளால் சந்திக்கும் சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தனது பதிவில் உறுதியளித்தார். பிரியங்காவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.