நெல்லை: பாஜக தான் விஜயை இயக்குவதாக தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அதை மாற்ற முயற்சி செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களிடம் என்ன கொள்கை இருக்கிறது? யாருக்காக அவர்கள் வருகிறார்கள் என்று கேட்கிறேன்.
பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றி பேசும்போது கண்ணியம் குறையாமல் பேச வேண்டும்; வார்த்தைகள் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்கவைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பின்புலத்தில் அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார்; முதல்வரை மிரட்டும் தோணியில் பேசுவதில் இருந்தே பாஜக தான் விஜயை இயக்குவது தெரிகிறது. ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார், ஏன் இப்படி புரியாமல் பேசுகிறார் என்று மக்கள் நினைக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பயப்படுபவர்களுக்குத் தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' பட பிரச்சனைக்காக 3 நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல. ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது. கவர்னர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பதால், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது." என்றார்.