பாசிச பாஜக எத்தனை அடிமைகளோடு வந்தாலும் திமுக விரட்டி அடிக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
வேடசந்தூர்: பாசிச பாஜக எத்தனை அடிமைகளோடு வந்தாலும் திமுக விரட்டி அடிக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தி.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இதையெல்லாம் பொறுக்காத பாசிச பாஜக, அதன் அடிமையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி போன்றோர் மூலம், எப்படி தடுக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகின்றனர். திமுக அரசு மகளிருக்கான அரசாக விளங்குகிறது. இதுவரை அரசு பஸ்களில் 800 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 1 கோடி 20 லட்சம் பேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். ஒன்றிய பாஜ அரசுக்கு எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை கிடைத்துள்ளார். மேலும், பல அடிமைகளை தேடி வருகின்றனர். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுக விரட்டி அடிக்கும். என்றைக்குமே நம்மை விட்டு கை போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன். மேலும் உங்கள் மீது உள்ள நம்பிக்கையை கூறினேன்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் உற்று கவனிக்கின்றனர். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டு முதல்வரை பின்பற்றி திட்டங்களை தீட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஒரு பஸ் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார். அவர் எம்ஜிஆரை மறந்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமிக்கு யாரை பார்த்தாலும் அமித்ஷாவின் முகம் போலத்தான் தெரிகிறது. அமித்ஷா தான் அவருக்கு ஒனர். தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அதில் முதல் தொகுதியாக வேடசந்தூர் தொகுதி திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார்.