Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் புயல்; சர்ச்சையை கிளப்பிய பாஜக-வின் ஏஐ வீடியோ: அசாம் போலீசிடம் காங்கிரஸ் புகார்

கவுகாத்தி: மதரீதியான பிரிவினையைத் தூண்டும் வகையில் ஏஐ வீடியோ வெளியிட்டதாக அசாம் மாநில பாஜக மீது காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது, தேர்தல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. கடந்த 15ம் தேதி, அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொலி ஒன்றை வெளியிட்டது. அதில், சட்டவிரோத வங்கதேச குடியேறிகளால் அசாம் மாநிலம் குறிப்பிட்ட மதத்தினரால் பெரும்பான்மை கொண்ட பகுதியாக மாறுவது போன்றும், கவுகாத்தி விமான நிலையம், ரங் கர் அரங்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களை அவர்கள் கைப்பற்றுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோயை அவமதிக்கும் வகையிலான காட்சிகளும் அதில் இருந்தன. இந்த வீடியோ, மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் நோக்கில் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் திஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவர் பெதப்ரதா போரா அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே பகைமையை வளர்ப்பது, மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியின்மையைத் தூண்டுவது போன்ற குற்றங்களுக்காக பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது அல்ல என்றும், ஆவணங்களற்ற வங்கதேச குடியேறிகளால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றத்தின் உண்மையான அச்சுறுத்தலைத்தான் அந்த வீடியோ சித்தரிப்பதாகவும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம், மாநிலத்தின் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.