சீர்காழி: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடத்திற்கு நேற்று வந்தார். திறந்தவேனில் நின்று கையசைத்தபடி 300 மீட்டர் தூரம் சென்றார்.
தொடர்ந்து சீர்காழியில் அதிமுக பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நான் ஒரு விவசாயி பூமியின் அருமை எனக்கு தெரியும். விவசாய விளைநிலங்களை காக்க ஒன்றிய அரசோடு தொடர்புகொண்டு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டுவந்தேன். உங்கள் நிலத்தை யாராலும் பறிக்க முடியாது. பாஜவிடம் எடப்பாடி பழனிச்சாமி பயந்து கிடக்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்.
பாஜவை கண்டு நான் பயப்படவில்லை. எனக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்தார் என்று சட்டசபையில் கூறியுள்ளனர். வழக்கை நடத்தி நான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்களது சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.