* சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கே வலை
சென்னை: ஐபிஎல்லுக்கான மினி ஏலம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி, கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உடன், அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியும், சாம்சன் விஷயத்தில் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், சிஎஸ்கேவை தவிர, கேகேஆர், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுடனும் ராஜஸ்தான், சாம்சன் தொடர்பாக பேசி வருவதாக தெரிகிறது.
* தமிழகத்தின் ராகுல் 91ம் கிராண்ட் மாஸ்டர்
புதுடெல்லி: 6வது ஏஷியன் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதை அடுத்து, இந்தியாவின் 91வது கிராண்ட் மாஸ்டராக 21 வயது வி.எஸ்.ராகுல் உருவெடுத்துள்ளார். வி.எஸ்.ராகுல் சென்னையை சேர்ந்த வீரர் ஆவார். இது தொடர்பாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நிதின் நராங், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏஷியன் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப்பில் வென்று கிராண்ட் மாஸ்டராகி உள்ள ராகுலுக்கு வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகள் பெற்று இந்தியாவுக்கு அவர் பெருமை தேடித்தர வேண்டும்’ எனக் கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தை சேர்ந்த மற்றொரு இளம் வீரர் இளம்பரிதி உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
* டெஃப்லிம்பிக்ஸில் 111 இந்திய வீரர்கள்
புதுடெல்லி: காதுகேளாத விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகள், வரும் 15ம் தேதி முதல் டிச. 26ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, இதுவரை இல்லாத வகையில் 73 தடகள வீரர்கள் உட்பட 111 விளையாட்டு வீரர்களை இந்தியா அனுப்ப உள்ளது. தடகளம், பேட்மின்டன், கோல்ப், ஜூடோ, கராத்தே, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டேக்வான்டோ, மல்யுத்தம், டென்னிஸ் உட்பட 11 பிரிவு போட்டிகளில் இந்திய வீரர்கள் பஙகேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்கள் மற்றும் பிறவற்றுக்கு மத்திய விளையாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

