நியூயார்க்: அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரு கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த கொடூர தாக்குதலில் 2,973 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டுள்ளார் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. இதனை தொடர்ந்து, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோட்டாபாத் பகுதியில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த நிலையில், 9/11 தாக்குதல் என்று அழைப்படும் இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆனதையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கத்தார் தலைநகர் தோகாவில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதர் ஆசிம் இப்திகார் அகமது பேசுகையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், இது பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார். மேலும் காசாவில் மிருகத்தனமான ராணுவ நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும், சிரியா, லெபனான், ஈரான் மற்றும் ஏமனில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடத்தியதாகவும் பாகிஸ்தான் தூதர் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன், “அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலானது, இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் படையினர் நடத்திய கொடூர தாக்குதலைப் போன்றது. 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, அவர்களுக்கு நிதி அளிக்கவோ, அவர்களுக்கு புகலிடம் கொடுக்கவோ கூடாது என்று கூறப்பட்டது.
அவ்வாறு செய்யும் எந்தவொரு அரசாங்கமும் இந்த கவுன்சிலின் விதிகளை மீறுகிறது. அந்த கொள்கை எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பின்லேடன் படுகொலை செய்யப்பட்டபோது அவர் பாகிஸ்தானில்தான் இருந்தார். அப்போது யாரும் 'வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் கொல்ல வேண்டும்?' என்று கேள்வி கேட்கவில்லை. மாறாக, 'ஒரு பயங்கரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கப்பட்டது?' என்றுதான் அனைவரும் கேள்வி எழுப்பினர். இன்றும் அதே கேள்வியை நாம் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.