புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினார்கள். இரு நாடுகளும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கும் வேளையில நடந்த இந்த பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மோடி, டிரம்ப் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகள் இடையே வர்த்தகம், முக்கிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும் இருநாடுகள் இடையிலான பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், பொது நலன்களை முன்னெடுத்துச் செல்லவும் இருவரும் நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் மோடியும், டிரம்பும் ஆய்வு செய்தனர். அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பு சீராக வலுப்பெற்று வருவதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். தற்போது உலக அளவில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும், உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், பொது நலன்களை முன்னெடுத்துச் செல்லவும் நெருக்கமாக இணைந்து செயல்படவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,’ அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மிகவும் அன்பான மற்றும் ஈடுபாடு மிக்க உரையாடலை மேற்கொண்டேன். எங்கள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


