சென்னை: சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அக்கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று அமமுக கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்கிறது, இந்த எஸ் ஐ ஆர் பணிகளை தமிழகத்தில் உள்ள அலுவலர்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள் எனவே அனைத்து கட்சி ஒன்றிணைந்து விழிப்புடன் மேற்கொள்ளும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும். பழனிசாமியை தலைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தான் அமமுக தொடங்கப்பட்டது, மேலும் நாங்கள் கட்சியை தொடங்கியது பழனிசாமி துரோகத்திற்கு எதிராகத்தான்.
அவர் தலைமையை ஏற்று கொண்டு செல்ல மாட்டோம், அதனை நாங்கள் விரும்பவில்லை. கூட்டணிக்கு வர வேண்டும் என சில கட்சிகள் எங்களை அழைத்து கொண்டு இருக்கிறது. சிலர் தவெக -க்கு செல்வார் என்று கூறுகிறார்கள், அது உண்மை இல்லை. டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கூட்டணி இறுதிசெய்யப்படும். அமமுக- வை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தல் ஆளும் கட்சிக்கும் , தவெக கூட்டணிக்கும் தான் போட்டியாக இருக்கும்.இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.


