மீனம்பாக்கம்: பீகார் தேர்தல் வெற்றி நேர்மையாக வந்ததா என பார்க்க வேண்டும் என கமல்ஹாசன் எம்பி கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி, சென்னை விமானநிலையத்தில் இன்று பகல் 11.45 மணியளவில் எர் இந்தியா பயணிகள் விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள், வெற்றி பெற்றவர்கள் அனைவரும், நமக்கு அந்த வெற்றி நேர்மையான முறையில் வந்ததா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றி என்பது வெற்றியாளர்களின் சந்தோஷம். அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். எஸ்ஐஆர் சிறப்பு திருத்த பணிகள் குறித்து அனைத்து மக்களுக்கும் புரிய வைப்பதற்கு, என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்.
உங்களுக்கும் அந்த பொறுப்பு இருப்பதால், அப்பணிக்கு நீங்களும் உதவ வேண்டும். உங்களது நிறுவன தயாரிப்பில் ரஜினி நடிக்க இருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது பற்றி கேட்கிறீர்கள். என்னுடைய நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பதுதான், எனக்கு ஆரோக்கியமானது. தற்போது அதைத்தான் பண்ணியுள்ளோம். ரஜினிகாந்த்துக்கு கதை பிடிக்கும்வரை கேட்டு கொண்டே இருப்போம். இதில் புதிய இயக்குநருக்கும் வாய்ப்பு இருக்கிறது. நல்ல கதையாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடி கொண்டிருக்கிறோம். தற்போது எனது நிறுவன தயாரிப்பில் மட்டும் ரஜினி நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


