புதுடெல்லி: பீகாரில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் குழுவை அமைத்துள்ளது. பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் வாக்குகளை திருட முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி உள்ளது. இதை கண்டித்து அண்மையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை ஒன்றையும் நடத்தி உள்ளார்.
மேலும், தொகுதி பங்கீடு குறித்து தேஜ கூட்டணியிடையே இன்னும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே கடந்த 6ம் தேதி ராஜ்பூர் தொகுதி வேட்பாளரை அறிவித்து நிதிஷ் குமார் அதிர்ச்சி கொடுத்தார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விக்ஷீல் இன்சால் கட்சிகள் உள்ள சூழலில் தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பசுபதி குமார் பராசின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் இணைந்துள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
கடந்த 9ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பீகார் பேரவை தேர்தல் தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக காங்கிரஸ் தேர்தல் குழுவை அமைக்கும் முன்மொழிவுக்கு மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து 39 உறுப்பினர்கள் அடங்கிய காங்கிரஸ் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பீகாரை சேர்ந்த அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக பீகார் பிரிவு காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், ஷகீல் அகமது கான், மதன் மோகன் ஜா, ராஜேஷ் ரத்தோர், மோதிலால் சர்மா, அன்ஷூல் அலி கான், ரமேஷ் பிரசாத் யாதவ், சஷி ரஞ்சன், சுபோத் மண்டல், பவுசியா ராணா மற்றும் குஷ்பூ குமாரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.