பாட்னா: லாலு பிரசாத் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று தர்பங்கா பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது; பீகாரில் லாலு பிரசாத் யாத் தனது மகன் தேஜஸ்வியை முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அதேபோல் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர்களால் முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக முடியாது. தற்போது அந்த இரண்டு பதவிகளும் காலியாக இல்லை.
ஒன்றிய அரசு பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்களை கைது செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களை சிறையில் இருந்து வெளியே வர விடாது. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பி.எப்.ஐ. அமைப்பினரை சிறையில் வைத்திருப்பார்களா?. மிதிலா நகரில் சீதா தேவிக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ‘மைதிலி’ மொழிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் ‘மைதிலி’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
