நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,556 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 4,158 கனஅடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 5,556 கனஅடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.01 அடியாகவும், நீர்இருப்பு 21.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையில் இருந்து பாசனத்திற்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.