Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பென்னாகரம் அருகே யானைகளால் பயிர்கள் சேதம் பாறைகள் நிறைந்த பகுதியில் 1 கி.மீ. தூரத்திற்கு சூரிய மின்வேலி

*வனத்துறை நடவடிக்கை

தர்மபுரி : பென்னாகரம் அருகே யானைகளால் பயிர்கள் சேதமாவதாக கிராம மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பூதிப்பட்டி பகுதிகளில் பாறைகள் நிறைந்த இடங்களில், ஒரு கிலோ மீட்டர் தூரம் சூரிய மின்வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி வன மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் வனக்கோட்டம் உள்ளது. இந்த வனக்கோட்டங்களில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய வனச்சரக பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. சமீபத்திய சர்வேபடி, 400க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தர்மபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோட்டில் மட்டும் 50 முதல் 75 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடக யானைகள் ஓசூர், தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இடம் பெயர்கின்றன. பின்னர், மே, ஜூன் மாதங்களில் மீண்டும் வந்த இடங்களுகே திரும்பி செல்கின்றன. இவ்வாறு திரும்பி செல்லும்போது, வனப்பகுதி கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.

பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளிலிருந்து யானைகள் அவ்வப்போது காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து காட்டுக்குள் விரட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டிற்கு முன்பு பாலக்கோடு மாரண்டஅள்ளி காளிகவுண்டனூருக்குள் புகுந்த 5 யானைகளில் 3 யானைகள் முறைகேடாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலியாகின. 2 குட்டி யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.

சில மாதங்களுக்கு முன்பு பாலக்கோடு பஞ்சப்பள்ளி அருகே மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுபோல் பல்வேறு காரணங்களால் யானைகள் உயிரிழக்கின்றன. யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வராமல் இருக்க யானை தாண்டா தடுப்பு குழிகள் தோண்டப்படுகிறது. யானை தாண்டா தடுப்பு குழிகள் தூர்ந்து விட்டதால், யானைகள் எளிதாக கடந்து விளைநிலங்களுக்குள்ளும், வன கிராமத்திற்குள்ளும் புகுந்து விடுகின்றன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘பென்னாகரம் அருகே பூதிப்பட்டி கிராமத்தில் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். விவசாயம் தான் எங்களது முதன்மையான தொழிலாக உள்ளது. எங்களது விவசாய நிலத்தையொட்டியுள்ள பென்னாகரம் வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. யானைகள் காட்டில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை தாண்டா குழி அமைக்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் பாறைகள் இருந்ததால், யானை தாண்டா குழி தோண்டாமல் விட்டனர்.

ஒருசில இடங்களில் குழிகளும் மூடி விட்டது. இதனால் யானைகள் அவ்வப்போது வந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு அளித்த புகாரின் பேரில், வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்தனர். ஆனால், இதுவரை யானைகள் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பாறைகள் இருந்த இடத்தில் குழி எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை,’ என்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பை தடுக்க மாவட்ட வனத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வனத்தில் இருந்து யானைகள் வெளியே வராமல் இருக்க தூர்ந்துபோன யானை தாண்டா தடுப்புகுழிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், யானைகள் எங்கெல்லாம் வனத்தில் இருந்து வெளியே வருகிறது என கண்டறிந்து அந்த இடத்தில் சூரிய மின்வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று பென்னாகரம் பூதிப்பட்டியில் இருந்து வந்த பொதுமக்கள், யானைகளால் பயிர்கள் சேதமாகிறது; எனவே, பூதிப்பட்டி அருகே பாறைகள் நிறைந்த பகுதிகளில் யானை தாண்டா குழி அமைக்க வேண்டும் என மனு அளித்தனர். அதன்பேரில் மேல் அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது. பாறைகள் நிறைந்த பகுதிகளில் ஒருகிலோ மீட்டர் தூரம் சூரியமின்வேலி அமைக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். விரைவில் மின்வேலி அமைக்கப்படும்,’ என்றனர்.