பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் அருகே மர்ம ட்ரோன்கள் பறந்ததால், விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெல்ஜியம் நாட்டில் சமீப காலமாக முக்கிய இடங்களில் மர்ம ட்ரோன்கள் பறப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வார இறுதியில் கிளெய்ன்-புரோகல் ராணுவ விமானப்படை தளம் அருகே ட்ரோன்கள் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய வான்பரப்பில் நேற்று (நவ. 4) இரவு 8 மணியளவில் மர்ம ட்ரோன்கள் பறப்பதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சேவை தொடங்கிய நிலையில், மீண்டும் ட்ரோன்கள் தென்பட்டதால் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது. இந்த ட்ரோன் அச்சுறுத்தல் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்துடன் நிற்கவில்லை.
பெல்ஜியத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான சார்லராய் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீஜ் விமான நிலையங்களிலும் ட்ரோன்கள் தென்பட்டதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பல விமானங்கள் மாஸ்ட்ரிக்ட், ஐந்தோவன், ஓஸ்டென்ட் போன்ற அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த தொடர் ட்ரோன் சம்பவங்கள் குறித்து பெல்ஜிய ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
