Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விகேபுரத்தில் நள்ளிரவில் பரபரப்பு: டிபன் கடைக்குள் புகுந்து எண்ணெய் குடித்துச் சென்ற கரடி

விகேபுரம்: விகேபுரத்தில் நள்ளிரவில் டிபன் கடைக்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்த வைத்திருந்த எண்ணெயை குடித்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மிளா, மான், உடும்பு, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த வனவிலங்குகள் மீண்டும் அடர்வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார பகுதியிலேயே சுற்றி வருகிறது. இதனை வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினரும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி, சாலைகளில் உலா வரத்தொடங்கியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ள 10க்கும் மேற்பட்ட கரடிகள் பாபநாசம், டாணா, அனவன்குடியிருப்பு, விகேபுரம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, கோட்டைவிளைபட்டி, பசுக்கிடைவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடி வருகிறது. பகலில் மலையடிவார புதரில் பதுங்கியிருக்கும் கரடிகள் இரவில் ஊருக்குள் உலா வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பகல், மாலை நேரங்களில் கூட கரடிகள் நடமாட துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் வனத்துறை சார்பில் தற்போது வரை கரடியை கூண்டு வைத்து பிடிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மாதம் 13ம் தேதி கோட்டைவிளைபட்டியில் ஊருக்குள் புகுந்த கரடி நீண்ட நேரமாக குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. கடந்த மாதம் 31ம் தேதி சிவந்திபுரம் ஊராட்சி ஆறுமுகம்பட்டியில் உள்ள தோட்டத்தில் புகுந்த கரடி பைப்லைன்களை சேதப்படுத்தியது. கடந்த 10ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பாபநாசம் பொதிகையடி மெயின்ரோட்டில் உள்ள ரேஷன் கடை அருகில் கரடி சர்வ சாதாரணமாக உலா வந்ததால் அப்பகுதி அதிகாலையில் நடமாடுவதை தவிர்க்க தொடங்கி விட்டனர்.

இந்த சூழலில் கடந்த 17ம் தேதி பசுக்கிடைவிளை வடக்கு பகுதியில் உள்ள இலுப்படியார் சுடலை ஈஸ்வரர் கோயிலில் புகுந்த 3 கரடிகள், கோயில் வளாகத்தில் அங்கும் இங்குமாக நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது. பின்னர் கோயிலில் சுவாமி சன்னதி அருகேயுள்ள விளக்குகளில் இருந்த எண்ணெய் குடித்துவிட்டு சென்றது. ஒரே நேரத்தில் 3 கரடிகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் கரடிகளை அடர்வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் நடத்தி வரும் டிபன் கடைக்குள் புகுந்த கரடி, அக்கடையில் இருந்த அனைத்து பொருட்களையுமே சேதப்படுத்தியது.

பின்னர் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெயையும் குடித்துச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கரடியால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக விரைந்து வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இல்லையெனில் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்