ஊட்டி: ஊட்டி அருகே உள்ள எச்பிஎப் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடியை நாய்கள் விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில சமயங்களில் பகல் நேரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து விடுகின்றன. நேற்று ஊட்டி அருகே உள்ள எச்பிஎப் பகுதியில் குடியிருப்பு அருகே ஒரு கரடி பகல் நேரத்தில் உலா வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் சத்தம் போட்டு கரடியை விரட்ட துவங்கினர். அப்போது, சில நாய்கள் கரடியை விரட்டிச் சென்றன.
இதனால், அந்தக் கரடி குடியிருப்பு பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. நாய்கள் கரடியை விரட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், எச்பிஎப் பகுதியில் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.