Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழையின் அளவு பதிவாகி வருகிறது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் டெல்டா உள்பட பல பகுதிகளில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருகிறது. அதேபோன்று, கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடிக்கடி லேசானது முதல் கனமழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோன்று, சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருகிறது. வெயில் தாக்கத்துடன் போராடி வந்த சென்னைவாசிகளுக்கு ஜில்லென்ற சீதோஷ்ணம் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியது.

இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த சூழ்நிலையி்ல், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதலல் 50 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், 19ம்தேதி முதல் 23ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.