Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதியை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும்.

தென்மேற்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணிக்கு ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக். 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த காற்றழுத்தம் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் உருவாக வாய்ப்புள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, தங்கச்சிமடத்தில் 170 மி.மீ., மண்டபம் பகுதியில் 143 மி.மீ. மழையும் ஈரோட்டில் வரட்டுபள்ளத்தில் 128 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.