Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார்.

குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் எனக் கண்டுபிடித்தது. முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து துப்புதுலக்கி மார்ச் மாதத்தில் அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ்அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி.சீனிவாசன் ஆஜாரனார். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் நீதிபதி கடந்த 21ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள், வரும் 24ம் தேதி அவர்களுக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்படும். ஜெயில்தார் சிங் விடுதலை செய்யப்படுகிறார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நேற்று தண்டனை விபரங்களை அறிய குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோரை போலீசார் நீதிமன்ற அறைக்கு பலத்த பாதுகாப்புடன் கூட்டிவந்தனர். இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு நீதிபதி தண்டனை விபரங்களை அறிவித்தார். அதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தண்டனை விபரம்...: ஜெகதீசுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 397 (கொள்ளையடிக்கும்போது கொலை), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 396 (கூட்டுக்கொள்ளையின்போது கொலை) இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (குற்றத்திற்கு தூண்டுதல்) ஆகிய 3 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

ராகேசுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 397 (கொள்ளையடிக்கும்போது கொலை), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 396 (கூட்டுக்கொள்ளையின்போது கொலை), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (குற்றத்திற்கு தூண்டுதல்), ஆயுத தடை சட்டம் ஆகிய 4 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அசோக்குக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 397 (கொள்ளையடிக்கும்போது கொலை), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 396 ( கூட்டுக்கொள்ளையின்போது கொலை). இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (குற்றத்திற்கு தூண்டுதல்) ஆகிய 3 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.