புதுடெல்லி: சட்டப்படிப்பை முடித்தவர்களை வழக்கறிஞர் தொழில் செய்ய பதிவு மற்றும் வழங்கும் அதிகாரம் அந்தந்த மாநில பார்கவுன்சிலுக்கு தரப்ப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இதறகான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களால் பல மாநிலங்களில் பார்கவுன்சில் தேர்தல் நடத்தப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ளது. பார்கவுன்சில் தேர்தல் பல மாநிலங்களில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வரதன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தேர்தல் நடத்தப்படாத மாநுலங்களில் பார்கவுன்சில் தேர்தலை நடத்த கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்குமேல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படாத அனைத்து மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வக்கீல் பதிவு செய்ய வில்லை, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படவில்லை போன்ற எந்த காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய நீதிபதிகள் கட்டாயம் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர்.