சென்னை: கீழடி நாகரீகம் தொடர்பான வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, ரூ4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில் கீழடி தொடர்பான வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிபடுத்தும் வகையில் திமுக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில்; உலகின் மூத்த நாகரீகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் கீழடியின் தொன்மத்தை அங்கீகரித்தன. கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கு கீழடி நாகரிகம் ஒரு சான்றாக வெளிவந்தது. இந்தியாவின் பழங்கால வரலாற்றையே திருத்தி எழுதி உள்ளது கீழடி. தமிழனின் உயர்ந்த நாகரீகம் கீழடி அகழாய்வு மூலம் உலகுக்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு.600 என கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்தது.
கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும்; தமிழர் வரலாற்றை ஒருநாள் உலகமே சொல்லும். பல்வேறு சிறப்புகளை கொண்ட கீழடி நாகரீகத்தை உலகமே உற்று கவனிக்கிறது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது கீழடி மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.