‘நிசார்’ செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி செலவில் இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கம்
சென்னை: இஸ்ரோ - நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. அதன்படி கடந்த 2014ம் ஆண்டு செப்.30ம் தேதி இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது.
இதன் பின்னர், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன. இஸ்ரோ - நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோளில் இரண்டு முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது, 12 நாளுக்கு ஒருமுறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக நிசார் செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும் என்றும், பனிக்கட்டிகள் எவ்வாறு உருகுகின்றன, நிலச்சரிவுகள் எங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, வனப்பகுதிகள், பயிர் நிலங்களில் ஏற்படும் மாறுதல்கள், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஆகியவை குறித்து நிசார் செயற்கைக்கோள் ஆராயும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே நிசார் செயற்கைக்கோள் திட்டத்தின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த இந்த ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.40 மணியளவில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கான கவுன்டவுன் தொடங்கி உள்ளது. அதேபோல் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த நிசார் செயற்கை கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.