சாலை விபத்தில் மரணமடைந்த கழக உறுப்பினர் சரிதா குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: சாலை விபத்தில் மரணமடைந்த கழக உறுப்பினர் சரிதா குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் , "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த 2.6.2025 அன்று கழக உறுப்பினரான சரிதா, தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, பின் மண்டையில் பலத்த அடிபட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையினை முதலமைச்சர் சரிதா அவர்களின் கணவர் எஸ்.கண்ணன் அவர்களிடம் இன்று (02-08-2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.