Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 26, 27 என 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை; திருச்சியில் எடப்பாடி சந்தித்து பேச திட்டம்?

சென்னை: பிரதமர் மோடி வரும் 26, 27 என 2 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். திருச்சியில் தங்கும் அவரை எடப்பாடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவினர் கூட்டணி ஆட்சி என்று கருத்து ெதரிவித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதே போல் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜயின் த.வெ.க. கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்துள்ளது. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வந்த பிறகுதான் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்பது தெரிய வரும். தேமுதிக தனது கூட்டணி முடிவை அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணியை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று கூறி வருகிறது. இதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, கூட்டணி ஆட்சி தான் என்று அளிக்கும் பேட்டியில் அனைத்திலும் கூறி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதால், பாஜகவை கழற்றி விடலாமா? என்பது பற்றியும் எடப்பாடி யோசித்து வருகிறார். இது தொடர்பாக விஜய், சீமான் போன்றவர்களுக்கு நேரடியாக எடப்பாடி அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். அதாவது வரும் 26ம் தேதி(நாளை மறுநாள்) மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு அன்று இரவு 7.50 மணிக்கு வருகிறார். இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்து பேச உள்ளார். தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து சேருகிறார்.

இரவில் திருச்சியில் பிரதமர் மோடி தங்குகிறார். இரவில் தங்கும் அவரை சந்தித்து பேச 13 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலு மணி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கூட்டணி ஆட்சி என்று பாஜக கூறி வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்பின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. 27ம் தேதி அரியலூர் மாவட்டம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் 27ம் தேதி காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து அவர் திருச்சி வந்து மதியம் 2.25 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், 7 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.