Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி, 4 நாட்கள் அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக இன்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார். அந்நாட்டு அதிபரான நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி செல்கிறார். நாளை வரை இருக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக தலைநகர் நிகோசியாவில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் லிமாசோல் நகரில் நடைபெறும் வர்த்தக மன்றத்திலும் சிறப்புரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். சைப்ரஸ் பயணத்தை முடித்து கொண்டு நாளை கனடா புறப்படுகிறார்.

17ம் தேதி வரை அங்கே இருக்கும் அவர், கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்தி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். பின்னர் 18ம் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவி அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் குரேஷியா செல்வது இதுவே முதல் முறையாகும்.