Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷாவிற்கு ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை: ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி

கோவை: கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று (11/08/2024) எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர். ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை வீரர்களில் ஆண்கள் சூர்ய குண்டத்திலும், பெண்கள் சந்திர குண்டத்திலும் நீராடினர். பின்னர் தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும் விமானப்படை வீரர்கள் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' எனும் வீடியோ இமேஜிங் நிகழ்ச்சியையும் கண்டு வியந்தனர்.

ஈஷாவில் இவ்வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த 'நாடி சுத்தி, யோக நமஸ்காரம்' என்ற யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். இந்தப் பயிற்சிகள் மன அழுத்தம் நிறைந்த பணிச் சூழ்நிலைகளை மிக இலகுவாகவும், தெளிவுடனும் கடந்து செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பயிற்சிகள் மிகவும் அழுத்தமான சூழல்களில் அவர்களின் நெகிழ்வுத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இந்திய விமானப் படையின் மூலம் முதல் முறையாக 'தரங் சக்தி' எனும் பன்னாட்டு விமானப்படை பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப் படை வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதன் முதற்கட்டப் பயிற்சிகள் தென்னிந்தியாவில் கோவையில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக பன்னாட்டு விமானப்படை வீரர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருகைப் புரிந்து உள்ளனர்.